தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்

(Symbols of TamilNadu)













ஏற்காடு இளங்கோ



















மின்னூல்



என்னுரை

நமது தாய்மொழியான தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த பழமையான மொழி. அது செம்மொழி தகுதியைப் பெற்ற மொழியாகும். இன்றைய ஆங்கில மோகத்தின் காரணமாக தமிழ்மொழிமீது இருக்கும் பற்று குறைந்துகொண்டே வருகிறது. எனக்கு தமிழ் பேசத் தெரியும், ஆனால் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது. தமிழைக் கட்டாயக் கல்வியாக்கவேண்டிய சூழல் எழுந்துள்ளது. தமிழ் மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழி.

தமிழ்நாட்டிற்கு என்று மாநில அடையாளச் சின்னங்கள் (Symbols of TamilNadu) உள்ளன. ஆனால் அவை என்ன, என்ன எனக் கேட்டால் சரியான பதில் கூற முடியவில்லை. அதேபோல் தமிழக அரசு எக்காலக்கட்டத்தில் சின்னங்களை அறிவித்தது என்பதற்கான சரியான பதிலும் கிடைக்கவில்லை. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழகத்தின் சின்னங்கள் எவை என்பதைத் தெளிவுபடுத்தவே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. . தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. . இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



வாழ்த்துகளுடன்

- ஏற்காடு இளங்கோ















தமிழ்நாடு

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாட்டை தமிழகம் என்றும் அழைக்கின்றனர். பிரிட்டிஷ் இந்தியாவில் மதராஸ் மாகாணம் (The Madras Province) என அழைக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டில் இந்தியா குடியரசானவுடன் மதராஸ் மாநிலம் (Madras State) எனப் பெயரிடப்பட்டது. 1950 முதல் 1953 வரை ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் மதராஸ் மாநிலத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை இதில் அடங்கி இருந்தன. 1953ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல் ஆந்திரா பிரிந்து தனி மாநிலமானது.

மொழிவாரி மாநிலம் 1956ஆம் ஆண்டில் அமைக்க மாநில புனரமைப்புச் சட்டம்(States Reorganisation Act) கொண்டுவரப்பட்டது. மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடந்தன. சங்கரலிங்கனார் என்பவர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்காக 78 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13இல் உயிர் துறந்தார். 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையாகும். இது மதராஸ் (Madras) என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1996ஆம் ஆண்டிலிருந்து சென்னை என அழைக்கத் தொடங்கினர். சென்னை இந்தியாவின் பெரிய நகரமாகும். சென்னையே தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமாகும்.

தற்போது தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாடு இந்திய மாநிலங்களின் பரப்பளவில் 11 ஆவதாகவும், மக்கள் தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை, மலைத்தளங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தளங்கள், உலக பாரம்பரியச் சின்னங்கள் என பல உள்ளன. இந்தியாவிலேயே அதிக நகர்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.



1. அரசு முத்திரை

தமிழக அரசின் முத்திரையில் (Emblem) உள்ள சின்னம் அல்லது இலச்சினை (Government of Tamil Nadu’s Seal) ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தின் உருவ அமைப்பு (Temple Tower of Srivilliputhur) ஆகும். இது 1956ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருவானது. அக்காலக்கட்டத்தில் சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராசர் இருந்தார். இவருடைய தலைமையிலான அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை அரசு முத்திரையாகத் தேர்ந்தெடுத்தது.

திருவில்லிபுத்தூர் :

தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊர் திருவில்லிபுத்தூர். இது ஒரு நகராட்சியாகும். ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவில்லிபுத்தூர் நகராட்சிமூலம் நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூர் ஒரு சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது.

திருவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் உள்ளது. 200 வருடம் சிறப்புகொண்ட இந்து மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. அதுதவிர 137 வருடங்கள் ஆன பென்னிங்டன் நூலகமும் இந்நகரில் உள்ளது. இதனை ஒரு கோயில் நகரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்காகவே திருவில்லிபுத்தூர் மிகவும் பிரபலம் அடைந்தது. அத்துடன் திருப்பாவை என்னும் தமிழ் இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அளித்ததும் திருவில்லிபுத்தூரே ஆகும்.

ஆண்டாள் :

விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்கிற அந்தணர் ஒருவர் துளசிச் செடியின் கீழ் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்தார். இக்குழந்தைக்கு கோதை எனப்பெயரிட்டார். குழந்தைக்கு தமிழ், சமயம் அனைத்தையும் பெரியாழ்வார் கற்றுக்கொடுத்தார். கோதை தமிழில் நல்ல திறமையும், கண்ணன்மீது மிகுந்த பக்தியுணர்வையும் கொண்டிருந்தார். தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்து வந்தார்.

இறைவனுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தயாரிக்கும் மாலையை ஒவ்வொரு நாளும் தான் அணிந்து அழகு பார்த்த பிறகே எடுத்து வைத்தார். இதனை ஒருநாள் பெரியாழ்வார் கண்டு மனம் வருந்தினர். ஆகவே புதிய மாலை தயாரித்து கண்ணனுக்கு அணிவித்தார். அன்ரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்கு ஏற்றவை எனவும், அவற்றையே தனக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனாலேயே சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும், ஆண்டவனையே ஆண்டவள் என்பதால்தான் அவரை ஆண்டாள் எனப் பெயரிட்டு அழைத்தனர் என்பது புராணக் கதை.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார். இறைவன்மீது ஆண்டாள் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான வைணவ சமய நூல்களாகும். இந்த இருநூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம், பக்தி ஆகியவற்றிற்காக மிகவும் போற்றப்படுகிறது. திருப்பாவை 30 பாடல்களையும், நாச்சியார் திருமொழி 143 பாடல்களையும் கொண்டுள்ளது.

திருமண வயதடைந்த ஆண்டாள் ஸ்ரீரங்கர் கோயிலில் உறையும் இறைவனையே திருமணம் செய்துகொள்ள பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் பெரியாழ்வார் கவலையில் இருந்தார். பெரியாழ்வார் கனவில் இறைவன் தோன்றி மணப்பெண்ணாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆண்டாளை அழைத்து வருமாறு கூறிவிட்டு மறைந்தார். கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆண்டாள், கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

ஆண்டாள் கோயில் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோயில் ஆண்டாள் கோயிலாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோயில்களில் ஒன்றாகும். ஆண்டாளை எடுத்து வளர்த்த பெரியாழ்வாரால் கட்டப்பட்டது. தனது மருமகனான பெருமாளுக்காக ஸ்ரீவடபத்ரசாயி என்கிற கோயிலையும், ஆண்டாள் கோயிலையும் கட்டினார். வடகிழக்கில் பழமையான பத்ரகாளி கோயிலும், மேற்கில் ஆண்டாள் திருக்கோயிலும், இரண்டுக்கும் இடையில் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனமும் உள்ளது.

பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, அதனால் கிடைத்த பொன் முடிப்பைக்கொண்டு இக்கோயிலை பெரியாழ்வார் கட்டினார் என்றும் நம்பப்படுகிறது. திருமலை நாயக்கர் மற்றும் இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோபுரம் :

மனிதனால் அமைக்கப்பட்ட மிக உயரமான அமைப்புதான் கோபுரம். நீள, அகலங்களைக் காட்டிலும் மிக உயரமாக இருக்கும். கோபுரங்கள் பழங்காலம் தொட்டே கட்டப்பட்டு வருகின்றன. கோபுரங்கள் என்பது இந்துக் கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும்.

ஒரு பட்டைக் கூம்பு (பிரமிட்) போல் கீழிலிருந்து மேலாக ஓங்கிச் செல்லும். இந்த அமைப்பு ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரை தளங்கள் கொண்ட கோபுரங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ராஜகோபுரம் 11 அடுக்குகளைக் கொண்டது. இது 192 அடி உயரம் கொண்டது. மேலும் 11 கலசங்களையும் கொண்டுள்ளது.

முத்திரை :

ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்று. இக்கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் அதிகாரபூர்வ முத்திரையாக உள்ளது. தமிழ்நாட்டின் அரசு முத்திரையின் மையப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் மேற்கு கோபுரம் அல்லது பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசங்கள் (Divya Desam) கோயில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. அதன்கீழ் சிங்கமுக முத்திரை உள்ளது. இது இந்தியாவின் இலச்சினையாகும். இது சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் இருபுறமும் இந்திய தேசியக் கொடி உள்ளது. முத்திரையில் இரண்டு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. முத்திரையின் மேல்பகுதியின் உள்ளே வளைந்தாற்போல் தமிழ்நாடு அரசு என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். முத்திரையின் கீழ்ப்பகுதி அதாவது அடிப்பகுதியில் வாய்மையே வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சத்யமேவ ஜெயதே என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

வழக்கு :

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மத ரீதியான அடையாளம் தமிழக அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ளது. மத ரீதியான இடங்களை முத்திரையில் வைக்கக்கூடாது என்று கோரி 2013இல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் கண்ணன் கோவிந்தராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு, மத ரீதியான சின்னங்களை அரசின் அடையாளமாக வைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் தமிழக அரசின் இலச்சினை (முத்திரை)யில் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின்கீழே தேசியக் கொடி 2 ஆகப் பிளவுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் இதுபோல மதத்தின் சின்னத்தை அரசின் முத்திரையாக வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தமிழக அரசு முத்திரையில் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அகற்றவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் தேசிய கொடியை முத்திரையில் இடம்பெறச் செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், பெண்மையைப் போற்றும்விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் அரசு முத்திரையில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. தேசியக் கொடியும் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஏராளமான இந்துக் கோவில்கள் உள்ளன. அந்தப் பழமையான கோவில் கோபுரங்கள் கலாச்சார சின்னமாகத்தான் பார்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவில் கோபுரம் அரசுச் சின்னத்தில் இடம் பெற்றாலும் மதச்சார்பற்ற முறைக்கு எதிராக அரசு செயல்பட்டது என்று இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை. அரசு முத்திரையில் தேசியக் கொடியின் அளவும் சரியாகத்தான் உள்ளது. எனவே பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூயியிருந்தனர்.

தமிழகத்தில் காணப்படும் கோபுரங்கள் திராவிடப் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டு. இதனை மதச் சின்னமாக பார்க்காமல் புராதனச் சின்னமாகப் பார்க்க வேண்டும்.



2. ஆட்சி மொழி

தமிழர்களின் தாய்மொழி தமிழ் மொழி (Tamil language) ஆகும். இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான மொழியாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. அதேசமயத்தில் ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருக்கிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக்கொண்டு பேசும் மக்கள்தொகையின் அடிப்படையில் உலகளவில் 18ஆம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்களால் தமிழ் பேசப்படுகிறது.

தமிழ் என்ற சொல் திராவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலர் கூறுகின்றனர். தமிழ் என்பதை த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இது விவாதமாக இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர் கால்டுவெல் ஆவார். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி, அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார்.

பழமை :

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி. பழந்தமிழில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்றும் பயன்படுத்துகிறோம். தமிழ் 2500 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது. இந்தியாவில் பேசக்கூடிய மொழிகளில் தமிழானது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. தமிழில் எழுதிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை கிறிஸ்துவுக்குமுன் 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.

இந்தியாவில் ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப்பதிவுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 60,000 திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 சதவீதம் தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் 5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

மொழியியல் சான்றுகளின் அடிப்படையில், மிகப் பழமையான படைப்புகள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழமையான படைப்பு தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி.மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கி.மு. 500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் சுமார் 6000ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழியாகத் தெரிகிறது.

எழுத்து :

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பின் அடிப்படையானது. தற்போதைய தமிழ் எழுத்து முறையானது தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது. இதுவே காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. வட்டெழுத்து முறையானது 6ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் உருவானது. இது ஓலைச்சுவடிகள் மற்றும் கல்லிலும் செதுக்குவதற்கு ஏற்ப இருந்தது.

தமிழ் எழுத்துகளை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என வகைப்படுத்துகின்றனர். உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, , , , ஒ ஆகிய எழுத்துகளை குறில் என்கின்றனர். நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, , , , , , ஒள ஆகிய எழுத்துகளை நெடில் என வழங்கப்படுகிறது.

மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படுகிறது. க், ச், ட், த், ப், ற் என்கிற எழுத்துகள் வல்லினம். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய எழுத்துக்கள் மெல்லினம். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய எழுத்துகளை இடையினம் என்கின்றனர்.

தமிழ் எழுத்துக்களில் சிறப்பு எழுத்தாக ஆயுத எழுத்து உள்ளது. ஆயுத எழுத்து என்பது ஃ - மூன்று புள்ளிகளாக எழுதப்படுவதாகும். இதற்கு அஃகேனம், தனி நிலை, புள்ளி, ஒற்று என்கிற பெயர்களும் உண்டு. இந்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு அஃது என்பது `அ’ குறில் `து’ - வல்லின உயிர்மெய் எழுத்து. பழந்தமிழில் பரவலாக ஆயுத எழுத்து பயன்பட்டது. ஆனால் தற்போது இதனை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர்.

எண்கள் கூட பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் எண் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொடக்கம் முதல் 9 வரையான எண்களுக்கு குறியீடுகள் இருப்பது போல் 10, 100 மற்றும் 1000 ஆகியவற்றுக்கும் தனிக்குறியீடுகள் இருந்தன.

பேச்சுத்தமிழ் :

தமிழில் பேச்சுத்தமிழ் மற்றும் உரைநடைத் தமிழ் என இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. உரைநடைத் தமிழை செந்தமிழ் எனலாம். எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழ் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கி வருகிறது.

பேச்சுத் தமிழ் என்பது வட்டாரப் பேச்சுத் தமிழாகவே உள்ளது. இதனை கொடுந்தமிழ் என்கின்றனர். தமிழில் வட்டார மொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. இது பல்வேறு செந்தமிழ்ச் சொற்களிலிருந்து பிறந்தவையாகும். எத்னொலோக் (Ethnologue) என்ற மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டமல்லாது சாதி அடிப்பiடயிலும் வேறுபாடுகிறது. பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்துவந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவை மறைந்து வருகிறது. ஒருவரின் பேச்சு வழக்கைக்கொண்டு அவரின் சாதியைச் சில வேலைகளில் கண்டறிய முடியும்.

பேசுபவர்கள் :

தமிழ்நாட்டில் வாழும் மக்களின் முதன்மை மொழி தமிழாகும். தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் தமிழ் பேசுகின்றனர். இந்தியாவில் கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்ராவிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும், முஸ்லீம் வாழும் பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது. இது தவிர 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் அரசால் ஒப்பந்தக் கூலிகளாகப் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குடியேறிய தமிழர்கள், தமிழ் பேசும் சமுதாயங்களை உருவாக்கினர். இங்கு வாழும் தமிழர்கள் தமிழ் மொழியைப் பிரதானமாகப் பேசுகின்றனர்.

ஆட்சிமொழி :

தமிழ்நாட்டின் ஆட்சிமொழி தமிழாகும். அரசு நிர்வாகத்திலும், எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியாக தமிழ் உள்ளது. தமிழ்மொழி தமிழகத்தின் ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. இதை ஆட்சித் தமிழ் என்றும் அழைக்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் 8ஆவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

மக்களின் மொழியிலேயே அரசு நிர்வாகம் நடைபெற ஆட்சிமொழிச் சட்டம் 1956 ஆண்டு டிசம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்டது. இது 1957ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 என்பதுதான் தமிழ்மொழி குறித்த முதல் சட்டமாகும்.

இலங்கையில் உள்ள மூன்று ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்றாகும். புதுச்சேரியிலும் அரசு அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் நாட்டு மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியாவில் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

செம்மொழி :

மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ள சில மொழிகளே செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். தமிழ்மொழியின் செம்மொழி தகுதிக்கு திருக்குறள், சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை உள்ளன.

இலக்கியப் பழமை அடிப்படையிலும், பிற பண்புத் தன்மைகளின் அடிப்படையிலும் தமிழ் செம்மொழி (Classical Language) தகுதியைப் பெற்றுள்ளது. இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக 2004ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று அங்கீகரிக்கப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வாறு செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும்.



3. மாநில கீதம்

தமிழ்நாடு அரசின் மாநில பாடல் அல்லது மாநில கீதம் என்பது நீராரும் கடல் உடுத்த... என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். இப்பாடல் 1970ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மாநில கீதமாக அறிவிக்கப்பட்டது. இப்பாடல் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (Manonmaniam Sundaram Pillai) என்பவரால் எழுதப்பட்டது. தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட பிறகே நிகழ்ச்சி தொடங்கும். விழா நிறைவு பெறும் போது தேசிய கீதம் பாடப்பட்டப் பிறகே நிகழ்ச்சி முடிவடையும்.

சுந்தரம் பிள்ளை :

சுந்தரம் பிள்ளை அவர்கள் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் கேரள மாநிலத்தில் ஆழப்புழா என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்பாள். இவர் இளம் வயதிலேயே தேவாரம், திருவாசகம் போன்ற சமய நூல்களைக் கற்றார். இவருடைய தமிழ் ஆசிரியர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை ஆவார். சுந்தரம் பிள்ளை 1876ஆம் ஆண்டில் பி.. பட்டம் பெற்றார். 1877ஆம் ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அது பின்னர் இந்துக் கல்லூரியாக மாறியது. அது கல்லூரியாக மாறுவதற்காக இவர் பாடுபட்டார். பின்னர் கேரளாவில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். இச்சமயத்தில் அவர் 1880ஆம் ஆண்டில் தனது எம்.. படிப்பை முடித்து முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். அப்போது தத்துவத்துறையின் பேராசிரியராக இருந்த டாக்டர் ஹார்வி துரையுடன் இவருக்கு நட்பு கிடைத்தது.

இவர் கல்லூரி வேலையை ராஜினா செய்துவிட்டு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த்துறையின் தனி அலுவலகப் பணியில் சேர்ந்தார். 1885ஆம் ஆண்டில் டாக்டர் ஹார்வி துரை அவர்கள் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தம் பதவிக்கு சுந்தரம் பிள்ளையை ஹார்வி சிபாரிசு செய்தார். அதன் பிறகு மீண்டும் சுந்தரம் பிள்ளை அரசர் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்தார்.

சுந்தரம் பிள்ளை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் நூற்றொகை விளக்கம் மற்றும் மனோன்மணியம் என்கிற நூலையும், திருவிதாங்கூர் பண்டைய மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore) என்கிற ஆராய்ச்சி நூலையும் எழுதினார். இந்த ஆராய்ச்சி நூல் 1894இல் வெளிவந்தது. கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து இதனை வெளியிட்டார்.

நூற்றொகை விளக்கம் :

உலக வாழ்க்கைக்கு மனிதன் அறிவு வளர கணிதம், ரசாயனம், உயிரியல், உளவியல், வானவியல், புவியியல், மருத்துவம் எனப் பல்வேறு துறைகள் காரணமாக இருக்கின்றன. அவர் காலத்தில் வளர்ச்சி பெற்ற பல அறிவியல் துறைகளைப் பற்றிய தகவல்களை தொகுத்து நூற்றொகை விளக்கம் என்ற நூலை 1888ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் அக்காலகட்டத்தில் ஒரு முன்னோடி நூலாக விளங்கியது.

நூற்றொகை விளக்கம் என்கிற நூல் 38 சூத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சூத்திரமும் ஒரு துறையைப் பற்றியதாக இருந்தது. இந்த நூலில் பல புதிய கலைச்சொற்களை சுந்தரம் பிள்ளை அறிமுகம் செய்துள்ளார் என்பது ஒரு சிறப்பு.

மனோன்மணியம் :

பெ. சுந்தரம் பிள்ளை 1891ஆம் ஆண்டில் மனோன்மணியம் என்கிற ஒரு நூலை வெளியிட்டார். 12 ஆண்டுகளுக்கு மேலாக இதனை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோன்மணியம் என்பது ஒரு நாடக நூல். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்தது. இலக்கிய வளம் அமையப்பெற்ற நூலாக புகழப்படுகிறது.

இது வரலாற்றுத் தொடர்புடையது போன்றும், தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் உருவான ஒரு நாடகக் கதை. ஆனால் இது உண்மையில் ஒரு கற்பனைக் கதையே.

லிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய இரகசிய வழி (The Secret Way) என்னும் நூலை படித்தப் பிறகு, அதனைத் தழுவி மனோன்மணியம் என்ற நூலை எழுதினார். இதை ஓர் இன்பியல் (Comedy) நாடகமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய நாடகத்தை உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் திருத்தம் செய்து கொடுத்தார்.

இயற்கை வர்ணனையையும், இலக்கிய நயத்தையும், கருத்துச் செறிவையும், கற்பனையையும், தத்துவப் பொருளையும், உலகியல் உண்மைகளையும், பிற அரிய கருத்துகளையும் சுவையோடு எழுதியுள்ளார். இது நாடகமாகவும், கருத்தால் காப்பியமாகவும் அமைந்துள்ளது. இது தமிழ் மொழியின் சிறந்த கலைச்செல்வங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இவர் தமிழுக்குப் புதிய தொண்டு செய்ய எண்ணியே இந்த நாடகக் காப்பியத்தை எழுதியுள்ளார். இவர் மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதியதன் காரணமாகவே இவர் பெயர் மனோன்மணியம் வெ. சுந்தரம் பிள்ளை என அழைக்கப்பட்டார். இந்நாடகத்தில் உவமைகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. அழகிற்கும், உறுதிக்கும், உவமை கையாளப்படுகிறது. ஆதலால் இந்த நாடகம் பல்கலைக்கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. இவர் 1897ஆம் ஆண்டு ஏப்ரல் 26இல் இயற்கை எய்தினார்.

மாநிலப் பாடல் :

மனோன்மணியம் என்கிற இந்த நூலில் “நீராருங் கடலுடுத்த நிலமடந்தை” என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் மற்றும் அனைத்து தமிழர் வாழும் இடங்களில் ஒலிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன், 1970ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டது.

அவர் எழுதிய முழுமையான பாடல் :

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

இப்பாடலின் முழு வடிவத்தில் சில திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக (Official Version) வெளியிடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

தமிழணங்கே!

உன்சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

அதிகாரபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பு

“Bharatha is like the face beauteous of Earth clad in wavy seas;

Deccan is her brow crescent-like on which the fragrant ‘Tilak’

is the blessed Dravidian land.

Like the fragrance of that ‘Tilak’ plunging the world in joy

supreme reigns Goddess Tamil with renown spread far and wide.

Praise unto You, Goddess Tamil, whose majestic

youthfulness, inspires awe and ecstasy.’

அலைகடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு

பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில்

திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின்

வாசனைப்போல்

அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ்

மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும்

இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு

வியந்து, செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இதுவே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் பொருளாகும்.



4. திருவள்ளுவர் ஆண்டு

இந்து காலாண்டர் முறையைப் பின்பற்றி தமிழ் நாட்காட்டி (Tamil Calendar) பயன்படுத்தப்படுகிறது. தமிழ் நாட்காட்டியானது தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தமிழர்கள் வாழும் பகுதியான மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் தமிழ் காலண்டரைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசுபவர்களும் இந்தக் காலண்டரை பின்பற்றுகின்றனர். திருவிழாக்கள், பயிரிடுதல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் தமிழ் காலண்டரை மக்கள் பயன்படுத்துகின்றனர். கிரிகோரியன் காலண்டர் முறையானது அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் காலண்டரானது சூரிய காலண்டர் (Solar Calendar) முறையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சூரிய மையக் கோட்பாட்டை அடியாகக் கொண்டது. சூரிய காலண்டர் முறையை அடிப்படையாக கொண்ட காலண்டரை அசாம், மேற்கு வங்காளம், கேரளா, மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் பின்பற்றப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு திருவிழாக்கள் தமிழ் காலண்டரை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. தமிழ் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14 அன்று வருகிறது. ஏப்ரல் 14 என்பது பாரம்பரிய தமிழ் காலண்டரின் முதல் நாளைக் குறிக்கிறது. தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அன்று அரசு பொதுவிடுமுறை நாளாக உள்ளது. சூரியக் காலண்டர் முறையைப் பின்பற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஏப்ரல் 14 அன்றே புத்தாண்டு பிறக்கிறது.

மாதம் :

தமிழ் காலண்டர் முறையிலும் 12 மாதங்கள் உண்டு. ஒரு மாதத்திற்கு 29 முதல் 32 நாட்கள் உள்ளன. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்கள் உள்ளன. திருமணம் போன்ற பல காரியங்களுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் தமிழ் மாதமும், தமிழ் தேதியும் குறிப்பிடுவது தமிழர்களின் பண்பாடாக உள்ளது.

பருவங்களை 6 பருவ காலங்களாகப் பிரித்துள்ளனர். இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி என்கிற காலங்களாக வகைப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பருவகாலமும் குறைந்தது 2 மாதங்கள் கொண்டதாக உள்ளன.

ஆண்டு :

தமிழ் காலண்டர் முறையானது 60 ஆண்டுகள் சுழற்சி (60 Years Cycle) கொண்டது. வட மற்றும் தென்னிந்திய பாரம்பரிய காலண்டர் முறையில் இது பின்பற்றப்படுகிறது. சீனாவிலும் 60 ஆண்டுகள் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது. 60 ஆண்டுகள் முடிந்த பிறகு மீண்டும் முதல் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. தமிழ் ஆண்டு சுழற்சி என்பது வாக்கிய (Vakya) அல்லது திருக்கணித பஞ்சாங்கம் (Tirukannitha Panchangam) அடிப்படையில் அமைகிறது.

கிரகங்கள் வானில் இருக்கும் நிலையைக் கொண்டு இம்முறை உருவானது. சனி மற்றும் வியாழன் கோளை அடிப்படையாகக் கொண்டே இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை தோன்றியது. சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது. வியாழன் சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகியது. வியாழன் தனது சரியான நிலையை மீண்டும் அடைய 60 ஆண்டுகள் ஆகிறது.

60 ஆண்டுகளின் தமிழ் பெயர்கள் :

1. பிரபவ 11. ஈஸ்வர

2. விபவ 12. வெகுதானிய

3. சுக்ல 13. பிரமாதி

4. பிரமோதூத 14. விக்கிரம

5. பிரசோற்பத்தி 15. விஷீ

6. ஆங்கீரச 16. சித்திரபானு

7. ஸ்ரீமுக 17. சுபானு

8. பவ 18. தாரண

9. யுவ 19. பார்த்திப

10. தாது 20. விய

21. சர்வசித்து 31. ஹேவிளம்பி

22. சர்வதாரி 32. விளம்பி

23. விரோதி 33. விகாரி

24. விகிர்தி 34. சார்வரி

25. கர 35. பிலவ

26. நந்தன 36. சுபகிருது

27. விஜய 37. சோபகிருது

28. ஜய 38. குரோதி

29. மன்மத 39. விசுவாவசு

30. துன்முகி 40. பராபவ

41. பிலவங்க 51. பிங்கள

42. கீலக 52. காலயுக்தி

43. சௌமிய 53. சித்தார்த்தி

44. சாதாரண 54. இரௌத்திரி

45. விரோதிகிருது 55. துன்மதி

46. பரிதாபி 56. துந்துபி

47. பிரமாதீச 57. ருத்ரோத்காரி

48. ஆனந்த 58. இரக்தாட்சி

49. இராட்சத 59. குரோதன

50. நள 60. அட்சய

திருவள்ளூவர் :

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் (Thiruvalluvar) என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கி.மு. 31ஆம் ஆண்டு பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிறந்த தேதியும், பிறந்த ஆண்டும் சரியாக கூற முடியாது எனினும் அவர் கி.மு. 31ஆம் ஆண்டில் பிறந்தார் என்றும், அவர் தை 2ஆம் நாள் பிறந்தார் என்றும், ஆகவே தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

சென்னைக்கு அருகில் மைலாப்பூரில் வாழ்ந்து வந்தார். அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது. அதே சமயத்தில் ஆதி-பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கூறுபவர்கள் உண்டு. கடைச்சங்க காலமான கி.மு. 300க்கும், கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்டபொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்குத் தேவையான வழிகளை திருவள்ளுவர் எழுதியுள்ளார். ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் என்ற வீதத்தில் 133 அதிகாரங்களில் 1330 குறள்களை எழுதியுள்ளார். இதனை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பிரித்து எழுதியுள்ளார். இது தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே எழுதியுள்ளார் எனக் கூறுவர். திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆகவே இதனை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதி கொண்டுள்ளது. திருக்குறள் கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது திருக்குறளுக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறப்பாகும். திருவள்ளுவரின் சிந்தனை உலக மக்கள் அனைவருக்கும் உதவும் வகையில் உள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்கின்றனர்.

திருவள்ளுவருக்காக தமிழக அரசு நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது தவிர கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது. லண்டனில் உள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ் என்னும் கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைத்துள்ளது. இது ஒரு பிரமாண்ட சிலை. இச்சிலை 30 அடி உயரமுள்ள பாறைமீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலையின் உட்புறம் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் ஆண்டு :

தமிழ் காலண்டர் முறையானது 60 ஆண்டு சுழல் முறையைக் கொண்டது. கிரிகோரியன் ஆண்டு முறையானது தொடர்ச்சியானது. இதேபோல் தமிழ் ஆண்டுகளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடினர். பேராசிரியர் கா. நமச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

தமிழறிஞர்கள் செய்த ஆய்வின்படி கிறிஸ்து பிறப்பதற்குமுன் திருவள்ளுவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என மாநாட்டில் முடிவு செய்தனர். மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரம், சுப்பிரமணியம் பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி..பெ. விசுவநாதம் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை எடுத்தனர்.

இந்த முடிவை திருவள்ளுவர் கழகம் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் 1935ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட கிறிஸ்துவ ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும் என்று கூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொங்கி வைத்தார். கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். தற்போது 2014 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2045ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படுகிறது.

தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. 1972ஆம் ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டது. 1981ஆம் ஆண்டுமுதல் தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்படுகின்றது. உலகத் தமிழர்களின் ஒருமைப்பாட்டைப் புலப்படுத்தும் ஆண்டாக திருவள்ளுவர் ஆண்டு உள்ளது.



5. மாநில மலர்

நமது தமிழ்நாட்டின் அடையாள மலர் என்பது செங்காந்தள் மலராகும். செங்காந்தள் மலர் ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். அதுதவிர தமிழீழத்தின் மலராகவும் இதனை அறிவித்துள்ளனர். பூக்கள் நெருப்பைப் போன்று நிறம் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆகவே இதனை உலகம் முழுவதும் வீடுகளில் வளர்க்கின்றனர்.

இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சுபர்பா (Gloriosa superba) என்பதாகும். உலகம் முழுவதும் கொடி லில்லி (Climbing Lily), படரும் லில்லி (Creeping Lily), குளோரியோசா லில்லி (Gloriosa Lily), டைகர் லில்லி (Tiger Lily), மற்றும் பிளேம் லில்லி (Flame Lily) எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும், இதற்குப் பல பெயர்கள் உண்டு. இதன் பூ நெருப்பைப் போன்று, தீக்கொழுந்து விட்டு எரிவதுபோன்ற நிறம் கொண்டிருப்பதால் அக்கினிசலம் (Fire Lily) என்றும், கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகிறது. மாரிக்காலத்தில் முதலிலேயே அழகாய்த் தோன்றுவதால் தோன்றி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

பூவின் நிறம் இரண்டாக மாறுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு பெயர்களிலும் அழைக்கின்றனர். இதன் இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்ற பெயரும் இதற்கு உண்டு. மேலும் இது செடி மற்றும் மரங்களில் பற்றி ஏறுவதால் பற்றி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கொடி வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படுகிறது. அரைவம், இரும்பு, கண்டல், கண்ணோவுப்பூ, கண்வலிப்பூ என்கிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இதன் கிழங்கு V வடிவம் கொண்டது. அதாவது கலப்பை வடிவமாக இருப்பதால் இதனை கலப்பைக் கிழங்கு எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும், கணுக்களில்லாதவை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுகின்றனர்.



தாயகம் :

இது வெப்ப மண்டல ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியா, இலங்கை, சீனா மலாக்கா தீபகற்பம், அயன மண்டல ஆப்பிரிக்கா, அந்தமான் தீவுகளிலும் காணப்படுகிறது. இது இயற்கையாக வனப்பகுதிகளிலும், ரோட்டு ஓரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து நிமிர்ந்து வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் வளர்கின்றன.

மருத்துவ குணங்களுக்காக இதன் கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால் இயற்கையாக காடுகளில் வளரும் இதன் கிழங்குகள் தோண்டி விற்கப்படுவதன் காரணமாக இவை அழிந்து வருகின்றன. இலங்கையில் இது அரிதான (Rare) தாவரமாக மாறிவிட்டது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முற்றிலும் அழிந்து விட்டது. பல நாடுகளில் களைச்செடியாக வளர்ந்த செங்காந்தள் தற்போது வேகமாக அழிந்து வருகிறது. இந்தியாவிலும் இது அழிந்து வரும் தாவரப்பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. அதே சமயத்தில் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் செங்காந்தளை மூலிகையாக பயிரிடுகின்றனர்.

விளரியல்பு :

செங்காந்தளின் விதைகள் மற்றும் மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome) மூலம் பயிர் செய்யலாம். பெரும்பாலும் கிழங்கின் மூலமே பயிர் செய்கின்றனர். இவை செம்மண், பொறை மண் போன்றவற்றில் நன்கு வளரும். ஊட்டச்சத்து குறைவான மண்ணிலும் வளரும். மண்ணின் PH மதிப்பானது 6.00 முதல் 7.00 வரை இருந்தால் இவை நன்கு வளரும், நடவு செய்த 180 நாட்களில் பலன் தரும். கோடைக்காலத்தில் இதன் கிழங்குகள் ஓய்வுநிலையில் இருக்கும்.

செங்காந்தள் கொடியானது 10 முதல் 15 அடி உயரம்வரை வளரும். இதன் தண்டானது வலுவில்லாதது. ஆகவே செடி மற்றும் மரக்கிளைகளை பற்றி பிடித்துக்கொண்டு ஏறும். இதன் இலையின் நுனியானது நீண்டு, சுருண்டு பற்றுக்கம்பிகளாகச் செயல்படுகிறது. தண்டு பசுமையாக இருக்கும். அதேசமயத்தில் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் கிழங்கிலிருந்தே வளரும். பூக்கள் செப்டம்பர் முதல் மார்ச் மாதங்களில் மலர்கின்றன.

பூவானது இலைக் கக்கத்தில் தனியாக இருக்கும். பூக்கள் பெரியவை 2.5 கிராம் எடை இருக்கும். பூக்கள் ஆறு இதழ்களுடன் அகல் விளக்குப் போன்று காட்சி தரும். இதழ்களின் ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும். அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றிப் பல நிறங்களைக் காட்டும் பூக்களாக உள்ளன. பூவிதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள் பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டே போகும். இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக்கொண்டோ இருக்கும். மகரந்த தாள்கள் 6 இருக்கும். அதன் நுனியில் உள்ள மகரந்தப்பை இங்குமங்கும் திரும்பக் கூடியது.

அயல் மகரந்த சேர்க்கைமூலம் கருவுறுதல் நடக்கிறது. குறிப்பாக வண்ணத்துப்பூச்சி மற்றும் சில பறவைகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூக்களிலிருந்து காய்கள் உருவாகின்றன. இக்கனி வெடிகனி வகையானது. செடி ஒன்றிற்கு 100 கிராம் விதைகளும், ஒரு கிலோ கிராம் அளவிலான கிழங்கும் கிடைக்கின்றன. ஒரு ஏக்கருக்கு 500 கிலோகிராம் அளவு கிழங்கு கிடைக்கிறது. விதைகள் ஒரு கிலோ 500 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பாதிப்பு :

இச்செடி விசத்தன்மை கொண்டது. இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியிலும் கோல்ச்சின் (Colchicine) என்னும் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை உண்டால் மரணம் ஏற்படும். குறிப்பாக இதன் வேர் மற்றும் கிழங்கில் அதிக விசத்தன்மை உள்ளது. சிறிதளவு உண்டாலும் முடி உதிரும். இதன் இலை மற்றும் தண்டு நம் உடலின் மீது பட்டால் தோலில் அரிப்பு ஏற்படும். இது சர்க்கரைவள்ளிக் கிழங்கு எனக் கருதி உண்ணும் நாய், பூனை, குதிரைகள் மற்றும் விலங்குகள் போன்றவை உயிர் இழக்க நேரிடுகிறது.

பயன் :

செங்காந்தாள் கிழங்கு மற்றும் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதனை மாவாக அரைத்தும் விற்பனை செய்கின்றனர். இக்கிழங்கில் கோல்ச்சிசின் மற்றும் சூப்பர்பைன் என்னும் மருத்துவக் கூறுகள் உள்ளன. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளிலும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆல்கலைடு (Alkaloid) எனப்படும் சுண்ணாம்புக்காரம் அதிகம் இருப்பதால் பல்வேறு நாட்டு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

தலைவலி, கழுத்துவலி, பாம்புக்கடி, வயிற்றுவலி, வயிற்றுப்புண், சிறுநீரகப் பிரச்சினை, சன்னி, கரப்பான், தொழுநோய், தோல் அரிப்பு, புற்றுநோய், அம்மை போன்ற பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாதம், மூட்டுவலி, பேதி, பால்வினை நோய், வெண்குட்டம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றல் அளிக்கும் குடிப்பானமாகவும் இருக்கிறது. தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் இது பயன்படுகிறது. குடற்புழுக்களை நீக்குவதற்கு நல்ல மருந்தாக உள்ளது.

இதன் விதைகளில் அதிகளவு கோல்ச்சிசின் என்னும் மருத்துவ மூலப்பொருள் உள்ளது. இது மூட்டுவலி மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் என்னும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாக மூட்டுகளில் தங்குவதாலேயே மூட்டுவலி ஏற்படுகிறது. இம்மருந்தானது மூட்டுகளில் யூரிக் அமில படிகங்கள் தங்காத வண்ணம் பாதுகாக்கிறது. ஆகவே இது மிகச் சிறந்த மூட்டுவலி மருந்தாகப் பயன்படுகிறது.



6. மாநில விளையாட்டு

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு கபடி (Kabaddi) ஆகும். இதனை சடுகுடு, பலிஞ்சடுகுடு என்றும் அழைக்கின்றனர். இது தமிழர்களால் பல காலமாக விளையாட்டுப்படும் ஒரு விளையாட்டு, அனைத்துக் கிராமங்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாடும் விளையாட்டாக விளங்கியது. தொடக்கப்பள்ளிகளிலும் சிறுவர்கள் இதனை விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாட்டு பிரபலம் அடைந்ததால் கபடியின்மீது இருந்த நாட்டம் குறைந்துவிட்டது.

கபடி என்ற பெயர் தமிழ்ப் பெயராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. அதே சமயத்தில் கபடி என்பது சமஸ்கிருதத்தில் இருந்தும் வந்திருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. சமஸ்கிருதத்தில் கார்-படி (Kar-badhi) என்பதற்கு கையால் பிடி என்பதே பொருளாகும். கபடி என்பது இந்தியாவின் அனைத்து கலாச்சாரத்திலும் இருக்கிறது. இது ஒரு பழங்கால விளையாட்டாகும்.

கபடி விளையாட்டு குறிப்பாக இந்தியா முழுவதும் கிராமங்களில் விளையாடப்படுகிறது. இந்தியா தவிர தெற்கு ஆசிய நாடுகளிலும் ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளிலும் இந்த விளையாட்டு பரவியுள்ளது. வங்க தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி உள்ளது. அங்கு கடுடு (Hadudu) என விளையாடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபியர்கள் கபடிமீது அதிகம் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் கபடி ஒரு வேடிக்கை விளையாட்டாக விளையாடினர். கபடி விளையாடத் தெரிந்தவர்களே ராணுவ வீரருக்கு தகுதியானவர்கள் எனக் கருதப்பட்டது. பழைய காலத்தில் ஸ்காட்டிஷ் எல்லை நகரான பீபெல்ஸ் (Peebles) என்னுமிடத்தில் உள்ள உள்ளூர் தொடக்கப் பள்ளி மைதானத்தில் கபடி விளையாடினர்.

விளையாட்டு :

கபடிப் போட்டியில் இரு அணிகள் கலந்துகொள்ளும். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பெயர் இருக்கும். ஒரு அணியில் ஏழு விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள். விளையாட்டிற்கான நேரம் 40 நிமிடங்கள். 20 நிமிடங்கள் முடிந்தபிறகு 5 நிமிடம் ஓய்வு நேரம் வழங்கப்படும். அதன் பிறகு வீரர்கள் தங்கள் பகுதியிலிருந்து எதிர்ப்பகுதிக்கு மாறிக் கொள்வார்கள். விளையாட்டு 6 பேரின் மேற்பார்வையில் நடக்கும். ஒரு மத்தியஸ்தர் (Referee), இரண்டு நடுவர் (Umpire), ஒரு மதிப்பெண் (Scorer) போடுபவர் மற்றும் இரண்டு உதவி ஸ்கோரர் எனப் பணிபுரிவர். விளையாட்டு வீரர்களின் வயது மற்றும் எடை போன்ற தகுதி அடிப்படையில் போட்டி நடத்தப்படும்.

இவ்விளையாட்டானது ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. கபடி விளையாட வெறும் நீளசதுரமான இடம் இருந்தால் போதும். ஆடுகளம் ஒரு நடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு பக்கத்துக்கு ஒரு அணி என இரு அணிகள் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்போதும் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லக்கூடாது.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி” (அல்லது) “சடுகுடு” என்று விடாமல் கூறிக்கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பி வரும் ஒருவகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் “கபடிக் கபடி” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும். அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் “கபடிக் கபடி” என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர் தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

கபடியை பெண்களும் விளையாடுகின்றனர். பெண்களுக்கான விளையாட்டு என்பது சற்று வேறுபடும். கபடி பாடுதலில் வித்தியாசங்களும் உண்டு. கிராமங்களில் கபடி அல்லது சடுகுடு, சடுகுடு என ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு பாட்டுப்பாடி விளையாடுவதும் உண்டு. கபடிப் பாடல்களில் பல உண்டு.

1. நாந்தான் வீரண்டா

நல்லமுத்து பேரண்டா

வெள்ளிச் சிலம்பெடுத்து

விளையாட வாரண்டா

தங்கச் சிலம்பெடுத்துத்

தாலிகட்ட வாரண்டா

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு...

2. கீத்து கீத்துடா

கீரைத் தண்டுடா

நட்டு வச்சன்டா

பட்டுப் போச்சுடா

போச்சுடா போச்சுடா...



ஆடுகளம் :

கபடி விளையாடுவதற்கான ஆடுகளம் மேடு, பள்ளம் இல்லாமல் இருக்க வேண்டும். கட்டாந்தரையாகவோ அல்லது கான்கிரீட் தளமாகவோ இருக்கக் கூடாது. அது ஆபத்தானது. வீரர்கள் ஆடுகளத்தில் விழுவதும், இழுக்கப்படுவதும் இவ்விளையாட்டில் அதிகம் நிகழும் ஒரு நிகழ்ச்சியாகும். தரை மிருதுவாக இல்லாமல் கரடு, முரடாக இருந்தால் வீரர்களுக்குக் காயம் ஏற்படும், கை, கால் முறிவும் ஏற்படும். ஆகவே ஆடுகளம் மணல், மரத்தூள், பஞ்சுமெத்தை பரப்பியதாக இருக்க வேண்டும்.

ஆண்கள் ஆடும் ஆடுகளம் 12.5 மீ x 10 மீ பரப்பளவு கொண்டிருக்கும். பெண்கள் விளையாடும் ஆடுகளம் 11 மீ x 8 மீ என்கிற பரப்பு கொண்டதாக இருக்கும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும் கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குலம் (5 செ.மீ) அளவினதாக இருக்கும்.

வகை :

கபடியில் இரண்டு வகையான விளையாட்டுகள் உள்ளன. சிஞ்சீவானி (Sanjeevani) மற்றும் காமினி (Gaminea) என உள்ளன. சிஞ்சீவானி என்னும் விளையாட்டில் அணிக்கு 9 பேர் இருப்பர். ஒரு அணியில் ஒருவரும், எதிரணியில் ஒருவர் என எதிரெதிராக ஒருவர் விளையாடுவர். வெற்றி பெற்ற வீரர் களத்தில் இருப்பார். தோல்வி அடைந்தவர் வெளியேறுவர். அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் களத்தில் இறங்குவார். இது தற்போதைய கபடி விளையாட்டு போலவே 40 நிமிடங்கள் விளையாடப்படுகிறது.

காமினி என்கிற விளையாட்டில் அணிக்கு 7 பேர் இருப்பார்கள். இதன் ஆடுகளத்திற்கு சரியான அளவீடு கிடையாது. ஒரு அணி வீரர்கள் முழுவதும் தோல்வி அடையும்வரை விளையாட்டு தொடரும். விளையாட்டிற்கு என்று நேரம் கிடையாது.

கபடி வரலாறு :

நவீன கபடி விளையாட்டு என்பது வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது. கபடி உலகளவில் பிரபலம் அடைந்தது என்பது 1936ஆம் ஆண்டில்தான். இது 1938ஆம் ஆண்டில் இந்தியாவில் கொல்கத்தா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. 1950ஆம் ஆண்டில் அகில இந்திய கபடிக் கழகம் விளையாட்டிற்கான விதிமுறைகளை வகுத்தது. 1973ஆம் ஆண்டில் இந்திய அமெச்சூர் கபடிக் கழகம் (Amateur Kabaddi Federation of India) ஆரம்பிக்கப்பட்டது. அது கபடி சார்ந்த விதிமுறைகளைச் சரியாக வடிவமைத்தது.

கபடி விளையாட்டு ஜப்பானில் 1979ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கபடிக் கழகத்தின் சார்பாக இந்தியாவிலிருந்து பேராசிரியர் சுந்தர்ராம் ஜப்பான் சென்றார். இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கபடி விளையாட்டைக் கற்றுக் கொடுத்தார்.

உலகக் கோப்பை :

கபடிக்கான உலகக் கோப்பைப் போட்டி முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. அதன் பின்னர் 2007ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. நடந்த போட்டிகளில் இந்தியாவே வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டிகளில் ஈரான் இரண்டுமுறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2010ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 58 - 24 என்கிற புள்ளி அடிப்படையில் பாகிஸ்தானை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்ததது.



7. மாநில விலங்கு

தமிழ்நாட்டின் மாநில விலங்கு (State Animal of Tamilanadu) எது எனக் கேட்டால் பலரால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது. நமது மாநிலத்தின் விலங்கு வரையாடு (Nilgiri Tahr) ஆகும். இதனை வரையாடு என்றும் நீலகிரி வரையாடு (Nilgiri Ibex) என்றும் அழைக்கின்றனர். இதனை வருடை (Varuddi) எனப் பழங்காலத்தில் அழைத்தனர். நற்றிணை என்னும் இலக்கியத்தில் வருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.

வரையாடுகள் செங்குத்தான பாறைகளில் வாழும். இதனை வரை என்பார்கள். வரை என்பது மலை உச்சி, குன்று, குவடு, பாறை சரிவுகளை உணர்த்துகிறது. இந்த பாறைச் சரிவுகளில் இவை வாழ்வதால் இதனை வரையாடு என்கின்றனர். அதாவது வரை + ஆடு ஆகிய இரண்டு தமிழ் சொற்களின் இணைப்பே வரையாடு. இது பாறைக்கு அருகே உள்ள புல்வெளியில் மேய்ந்துவிட்டு, பாறை இடுக்கில் உள்ள குகைகளில் தங்கும். இவை மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களை விட்டு விலகியே வாழ்கின்றன.

வரையாடு நீலகிரி மலைக்கு மட்டுமே (Endemic) உரித்தான சிறப்பினங்களில் ஒன்று. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியான தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இது அருகிய இனமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இது மிகவும் அழிந்து வரும் (Endangered) இனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

வரையாடு, ஆட்டின் இனத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. இது இமாலயக் காட்டாடு (Himalayan Tahr) மற்றும் அரேபியன் காட்டாடு (Arabian Tahr) ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என நம்பப்பட்டு வந்தது. ஆனால் 2005ஆம் ஆண்டில் இது நீல்கிரிட்ராகுஸ் (Nilgiritragus) என்ற புதிய பேரினமாக (Genus) அறிவிக்கப்பட்டது. வரையாட்டின் விலங்கியல் பெயர் நீல்கிரிட்ராகுஸ் ஹய்லோசிரியஸ் (Nilgiritragus hylocrius) என்பதாகும்.

உடல் அமைப்பு :

வரையாடு காட்டாடுகளுடன் தொடர்புடையது. காட்டாடுகளைவிட வரையாடு பெரிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இமாலய காட்டு ஆட்டைவிடப் பெரியது. வரையாட்டில் ஆண் மற்றும் பெண் ஆட்டிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஆண் வரையாடு பெண்ணைவிடப் பெரியது. இருமடங்கு எடை கொண்டது. ஆண் வரையாடு தோள்பட்டைவரை உயரம் 110 செ.மீ. இருக்கும். தலையிலிருந்து உடல் நீளம் 150 செ.மீ. வரை இருக்கும். பெண் ஆட்டின் உயரம் 80 செ.மீட்டரும், 110 செ.மீ. வரை நீளமும் கொண்டிருக்கும். ஆண் வரையாடு 80 முதல் 100 கிலோ எடையும், பெண் வரையாடு 50 முதல் 53 கிலோ எடையும் கொண்டிருக்கும்.







பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் ஆட்டின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அதன் உடல் மயிரும் கருப்பாகிக் கொண்டே இருக்கும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் பிட்டத்திற்கும், முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும்.

ஆண் மற்றும் பெண் வரையாடுகள் இரண்டிற்குமே தாடி கிடையாது. காட்டாடுகளுக்கு நான்கு காம்புகள் இருப்பதுபோல் பெண் வரையாட்டிற்குக் கிடையாது. பெண் வரையாட்டிற்கு இரண்டு காம்புகள் மட்டுமே உண்டு. இவைகளுக்கு வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு, பெண்ணின் கொம்பைவிடப் பெரியது. ஆண் வரையாடின் கொம்பு 44.5 செ.மீ. நீளம்வரை வளரும். பெண்ணிற்கு 35.6 செ.மீ. நீளம்வரை வளரும்.

இனப்பெருக்கம் :

வரையாட்டின் பேறுகாலம் என்பது 178 முதல் 190 நாட்களாகும். வரையாடு ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈன்றெடுக்கும். பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். குட்டிகள் நவம்பர்முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இது குளிர்காலம் என்பதால் தாய் தன் குட்டியை தன் அரவணைப்பில் வைத்துப் பத்திரமாக பாதுகாக்கும். குட்டி தாய்ப்பாலைக் குடித்து வளரும். 4 வாரங்களுக்குப் பிறகு திட உணவுகளை உண்ணத் துவங்கும். வரையாட்டின் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகளாகும்.

ஆண் ஆடுகள் தனியாக இருக்கும். இனப்பெருக்க காலத்தில் பெண் கூட்டங்களில் சேரும். ஆண்களிடையே போட்டி ஏற்படும். ஆளுமையுடைய ஆணே பெண்ணுடன் இணைசேரும். ஒன்றிற்கு மேல் ஆண்கள் இருந்தால் ஆண்களுக்கு இடையே சண்டை ஏற்படும். இரண்டு ஆண்களும் ஒன்றை ஒன்று துரத்தி, தன் தலை மற்றும் கொம்புகளால் முட்டிக்கொள்ளும். இந்தப் போட்டில் சில நேரம் ஏதாவது ஒரு ஆண் வரையாடு இறக்கவும் நேரிடுகிறது. பெரும்பாலும் தோற்கும் ஆண் கூட்டத்திலிருந்து விரட்டியும் அடிக்கப்படுகிறது.

வாழிடம் :

வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2600 மீட்டர் (3900 - 8500 அடி) வரையுள்ள உயரமான மலை முகடுகளில் வாழ்கின்றன. வரையாடுகள் கூட்டம்கூட்டமாக வாழ்கின்றன. ஒரு கூட்டத்தில் 6 முதல் 150 வரை வரையாடுகள் சேர்ந்து வாழ்கின்றன. புல்தரையும், சோலையும் (Sholas) நிறைந்த பகுதிகளிலேயே இவை வாழ்கின்றன.

பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும். அல்லது சிறு ஆண் குழுக்களாக வாழும். இனப்பெருக்க காலத்தில் பெண் குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள் வாழும். ஆண்கள் பல பெண் குழுக்களோடு கலந்து வாழும். இவை ஒன்றுக்கொன்று தகவல் தொடர்புகளை பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகியவற்றின் மூலம் பரிமாறிக்கொள்கிறது.

வரையாடுகள் புல்வெளியில் காணப்படும் புற்களையே உணவாக உண்ணுகின்றன. இவை விடியற்காலை மற்றும் மாலைநேரங்களில் மேயும். பகல் வேளைகளில் அதிக வெப்பத்தின்போது செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வு எடுக்கும். பிற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இதுபோன்ற பாறை இருக்குகளை தேர்வு செய்கின்றன.

வரையாடுகள் ஓய்வு எடுக்கும்போது கூட்டத்தில் உள்ள ஒரு ஆடு உயரமான இடத்தில் இருந்து காவல் காக்கிறது. பெரும்பாலும் பெண் ஆடே காவல் காக்கும் வேலையைச் செய்கிறது. வரையாட்டிற்கு நல்ல கூரிய கண் பார்வை உண்டு. வெகு தொலைவிலிருந்தே எதிரிகளைக் கண்டுகொள்ளும். ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை உணர்த்த சீக்கை ஒலி எழுப்பும். சில சமயங்களில் உரக்கக் கத்தி தன் கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்யும்.

அழிவு :

செந்நாய், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டன. இதனால் இவை விரைவாக அழிந்தன. 20ஆம் நூற்றாண்டில் சுமார் 100 வரையாடுகள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டன.

காடுகள் அழிக்கப்படுவதும், திருத்தப்பட்ட காடுகளில் பணப்பயிர்கள் பயிரிடப்பட்டதாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்தன. அது தவிர அதன் வாழ்விடங்கள் பலவறாக பிளவுபட்டன. கால்நடை மேய்த்தல், மின்சார உற்பத்திக்கென அணைக்கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல், வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. காடுகள் அழிப்பின்போது வரையாடுகளின் கூட்டங்கள் தனித்தனியாக பிரிந்து போனதன் காரணமாகவும் வாழ்வதற்கான பிரச்சினைகளைச் சந்திக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கை :

தற்போது 2000 முதல் 2500 வரையாடுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கேரளாவில் மட்டும் இரவிக்குளம் தேசிய பூங்காவில் (Eravikulam National Park) மட்டும் 1000 வரையாடுகள் உள்ளன. ஆணைமலைப் பகுதியில் 300 வரையாடுகள் உள்ளன. இதுதவிர தேனி - மேகமலை, முக்கூர்த்தி மலைகள், நீலகிரி மலைகள், ஆழியார் மலைகள், கொடைக்கானல், மேல் பழனி, ஸ்ரீவில்லிப்புத்தூர் எனத் தமிழ்நாட்டில் வரையாடுகள் வாழ்கின்றன. இங்கு நூறுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வரையாடுகள் உள்ளன. இதுதவிர கேரளாவில் அகத்திய மலைகள், ஹைகில்ஸ், மூணார் போன்ற இடங்களிலும் மிகக் குறைவான அளவில் வரையாடுகள் வாழ்கின்றன.

வரையாடுகள் அழிந்து வரும் விலங்கினப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வனவிலங்கு தேசிய பூங்காவில் வரையாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



8. மாநிலப் பறவை

இந்தியாவின் தேசியப் பறவை எது எனக் கேட்டால் மயில் என மாணவர்கள் உடனே பதில் கூறிவிடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது எனக் கேட்டால் பதில் சொல்லத் தடுமாறுகின்றனர். தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மகரகதப் புறா (Emerald Dove) ஆகும். இதனை பஞ்சவர்ணப் புறா, பச்சைப்புறா (Green Dove) மற்றும் பச்சை இறகுப் புறா (Green- Winged Pigeon) எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உலகளவில் 8600 பறவை இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 1301 பறவை இனங்கள் இருப்பதாக பறவையியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 508 பறவை இனங்கள் இருக்கின்றன. மரகதப் புறாவை அரியவகைப் பறவை இனமாகக் கருதப்படுகிறது. 1951ஆம் ஆண்டில் மரகதப் புறா ஒரு அழியும் அபாயத்தை நோக்கி (Threatened Species) உள்ள பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தமிழகத்தின் ஒரு சில வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மகரதப் புறாவின் அறிவியல் பெயர் சால்கோபாப்ஸ் இண்டிகா (Chalcophaps Indica) என்பதாகும். இதன் ஆங்கிலப் பெயர் காமன் எமரால்டு டவ் (Common Emerald Dove).

வாழிடம் :

மரகதப் புறா இந்தியா, மியான்மர் (பர்மா), தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை என வெப்பமண்டல தெற்காசியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இது தவிர ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. மரகதப் புறாவில் பல துணை இனங்கள் உள்ளன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. லாங்கிராஸ்டிரிஸ் (Longirostris) என்னும் மரகதப்புறா மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியிலிருந்து கேப்யார்க் தீபகற்பம் வரையிலும் உள்ளன. கிரைசோகுலோரா (Chrysochlora) என்னும் மரகதப் புறா கேப்யார்க் தீபகற்பத்திலிருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் வரையிலும் மற்றும் நார்ஃபோக் தீவிலிருந்து லார்டு ஹோவ் தீவு வரையிலும், நடலிசு கிறிஸ்துமஸ் தீவிலும் காணப்படுகின்றன.

மரகதப் புறாக்கள் மழைக்காடுகள், அடர்ந்த ஈரமுள்ள மரத்தோப்புகள், வயல், தோட்டம், சரபுன்னைக் காடுகள், கடற்கரை ஓரங்களில் உள்ள குற்றுத்தாவரங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளிலும் வாழ்கின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடுகட்டி அதில் இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. ஆஸ்திரேலிய மரகதப் புறாவின் இனப்பெருக்க காலம் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறுகிறது. ஆஸ்திரேலியாவில் வசந்தகாலத்திற்கும், தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

அங்க அடையாளம் :

மரகதப்புறாவானது மைனாவைவிடப் பெரியது. இப்பறவையின் பின்புறமும், மேல் இறக்கையும் பிரகாசமான மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். இதனாலேயே இதற்கு மரகதப்புறா எனப் பெயரிடப்பட்டது. மரகதப்புறா தடித்த உருவமுடையது. சராசரியாக 23 முதல் 28 செ.மீ. நீளம் கொண்டது. பறக்கும் போது இறகுகளும், வாழும், கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகிறது.

மரகதப்புறாவின் தலையும், உடலின் அடிப்பகுதியும் மங்கிய செந்நிறமாய் (Pink) இருக்கும். அடிவயிற்றுப் பகுதி சாம்பல் நிறமாகும். கண்கள் காப்பிக்கொட்டை நிறத்திலும் இருக்கும். அலகு சிவப்பாகவும், கால்கள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஆண் பறவையின் தோள் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. ஆண் பறவைக்கு சாம்பல் நிறக் கொண்டையும் இருக்கும். பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன. இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.

ஆஸ்திரேலிய மரகதப்புறாவானது தமிழக மரகதப்புறாவைபோல் அல்லாமல் சற்று மாறுபட்டு இருக்கும். கிரைசோகுலோரா என்னும் இனத்தில் தலையும், கீழ்ப்பகுதிகளும் சிவப்பு நிறத்திலிருந்து மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு, நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது. லாங்கிராஸ்டிரிஸ் இனத்தில் தலையும், கீழ்ப்பகுதிகளும் மர நிறத்திலிருந்து மெதுவாகக் கீழ் வயிற்றுப் பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது. கண்கள் கருத்தும், அழகும், கால்களும் இவைகளில் சிவந்து காணப்படும்.

பறத்தல் :

பொதுவாக மற்ற புறாக்களை ஒத்த விதத்தில் வேகமாகவும், நேராகவும் முறையான இறக்கைத் துடிப்புகளுடன் பறக்கின்றன. அவ்வப்போது விரைந்த கூரிய துடிப்புடன் காணப்படும். இது தனக்குப் பிடித்த, விரும்பிய காட்டுப் பகுதிகளிடையே மட்டும் தாழ்வாகப் பறக்கிறது. எனினும் பறப்பதைவிட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இப்பறவைகள் அதிகம் வாழ்கின்றன. சேர்வராயன் மலைப்பகுதியிலும் வாழ்கின்றன. இவை பெரும்பாலான நேரங்களில், மரங்களில் வசிக்கும். பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதால் எளிதாக காண முடிகிறது. காலை, மாலை வேலைகளில் உணவுக்காக பறந்து செல்லும்போது மட்டுமே இதைக் காண முடியும். உணவுக்காக தரைப்பகுதிக்கு இறங்கி வரும். உணவு எடுத்தபின் மிக வேகமாகப் பறந்து சென்றுவிடும். பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றும்.

மரகதப்புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ வாழ்கின்றன. இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. நிலத்தில் விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. பழங்கள், விதைகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உணவாக உண்ணுகின்றன.

மரகதப்புறா ஒரு சாதுவான பறவை. இவற்றின் அருகில் செல்லும்வரை அமைதியாக இருக்கும். இதனை எளிதில் பழக்கி விடலாம். இதன் கூப்பாடு ஆரம்பத்தில் மென்மையாக இருந்து பிறகு வலுக்கும். ஆறு முதல் ஏழு கூவல்கள் (Coos) கொண்ட மெதுவான கூவலாக இருக்கும். இவற்றின் மூக்கிலிருந்து ஹூ-ஹூ-ஹூன் (hoo-hoo-hoon) என்றும் ஓசையிடுகின்றன. இனச்சேர்க்கைப் பருவத்தில் ஆண் பறவை ஒருவகை நடனம் (Bobbing Dance) ஆடிப் பெண் பறவையைக் கவர்கிறது.





9. மாநில மரம்

தமிழ்நாட்டின் மாநில மரம் ஆசியப் பனையாகும். இதனை ஆங்கிலத்தில் பல்மைரா (Palmyrah) என்கின்றனர். இது அரிகேசியே (Arecaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தென்னை மரம் போன்றது. இது நேராக நிமிர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக வளைவுகள் ஏதுமின்றி சுமார் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் தாவரவியல் பெயர் போராசஸ் ஃபிளாபெல்லிஃபெர் (Borassus flabellifer) என்பதாகும்.

பனையை மரம் என்று பொது வழக்கில் அழைத்தாலும் இது மரவகையைச் சார்ந்தது அல்ல. இது புல்லினத்தைச் சேர்ந்ததே. பனை மரம் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வெப்ப மண்டலப் பகுதியில் வளர்கிறது. இம்மரம் ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் காணப்படுகிறது. ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், காங்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 10 கோடி பனை மரங்கள் உள்ளதாக கதர் மற்றும் கிராமத் தொழில் குழுமம் கணக்கிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி மரங்கள் உள்ளன. இது வறண்ட மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கின்றன. இது சமவெளி தவிர குன்றுகளின் சரிவுகளிலும், கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 750 மீட்டர் உயரம்வரை உள்ள பகுதிகளிலும் வளரும்.

பனை பயிரிடப்படுவதில்லை. தானாகவே இயற்கையாக வளர்கின்றன. போராசஸ் என்னும் பேரினத்தில் ஆப்பிரிக்கப் பனை மேற்கு ஆப்பிரிக்கப் பனை, ஆசியப் பனை, நியூகினி பனை, மடகாஸ்கர் பனை, சாம்பிரானோ பனை எனப் பல சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் காணப்படுவது ஆசியப் பனையாகும்.

ஆசியப் பனை :

ஆசியப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. சில ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதனை கள்ளுப் பனை (Toddy Palm), சர்க்கரைப் பனை (Sugar Palm), ஆசியப் பனை (Asian Palmyra Palm) மற்றும் கம்போடியப் பனை போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இதர மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பனை அதிகமாகக் காணப்படுகிறது.

பனை மரம் நூறு ஆண்டுகள்வரை வாழும் தன்மை கொண்டவை. இது வறண்ட பகுதியில் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரம் வரை வளரும். இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரை விசிறி வடிவ ஓலைகள் என அழைக்கப்படும் இலைகள் உள்ளன. இதனால் மரம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். முதிர்ந்த ஓலைகள் விழுந்தவுடன் மரத்தின் தண்டுகளில் வடுக்களாய் (Scars) பதிந்து விடுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

பனை மரங்கள் ஆரம்பத்தில் மிக மெதுவாகவே வளரக்கூடியவை. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகே வேகமாக வளரும். பனையில் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகள் உள்ளன. பனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 15 அடி உயரம் வளர்கிறது. இதன் பிறகே பூ பூக்கும். அப்போதுதான் ஆண் பானை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.


பெண் பனையைப் பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனவும் குறிப்பிடுகின்றனர். பெண் மரம் தான் காய்க்கும். காய்தான் நுங்காகவும், கனியாகவும் பயன்படுகிறது. இதன் காய்கள் இளம் பருவத்தில் பச்சை நிறத்திலும், நாள்பட கருப்பு நிறத்திலும் காணப்படும். காய்கள் குலைகளாய்க் காய்க்கும். கனியானது 10 முதல் 17 செ.மீட்டர் விட்டம் உடையது.

நுங்கு :

இளம் காயின் உள்ளே நுங்கு இருக்கிறது. காயின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பாகங்கள் உள்ளன. இதனுள் நுங்கு இருக்கிறது. இது வெண்ணிற சதைப்படலமும், அதனுள் சுவைநீரும் மிகுந்து காணப்படுகிறது. இது இளம் விதையே. வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். அதனால் இதனை பிரிட்டிஷ் ஆங்கில மக்கள் ஐஸ் ஆப்பிள் (Ice - apple) என அழைக்கின்றனர்.

நுங்கு முற்றிவிட்டால் இதன் சுவைக் குறைந்துவிடும். நன்கு முற்றிவிட்டால் இதனை சீக்காய் என்கின்றனர். இதனைச் சாப்பிட்டால் வயிற்றுவலி ஏற்படும். இதனை சிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கின்றனர்.

பழம் :

பனம்பழம் வெளியில் கருமை நிறத்திலும், உள்பகுதி செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பழத்தினுள் 2 அல்லது 3 விதைகள் இருக்கும். இவ்விதைகள் 2.5 செ.மீ. தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இந்த தும்புகளிடையே களித்தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப்பொருள் உள்ளது. இதனை பழங்களி என்கின்றனர்.

பனம் பழத்தை நேரடியாக உண்ண மாட்டார்கள். இதனை நெருப்பில் சுட்டே உண்பார்கள். சிலர் வேக வைத்தும் உண்கின்றனர். இது கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதைப் பதப்படுத்தி, வேறு வகையான உணவுகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். இதனை வெயிலில் காய வைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து உண்பவர்களும் உண்டு. காய வைத்த வற்றல் பழத்திற்கு பனாட்டு என்று பெயர். இப்பனாட்டிலிருந்து பாணிப்பனாட்டு என்னும் ஒரு வகை உணவுப் பண்டமும் தயாரிக்கின்றனர். இதன் களியை அரிசி மாவுடன் கலந்து, சீனியும் சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கின்றனர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது.

பயன் :

இது முறையாக பயிரிட்டு வளர்க்காத தாவரமாக இருந்தாலும், இதிலிருந்து ஏராளமான பயன்களை மக்கள் பெறுகின்றனர். பனை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுகின்றன. இது முளைவிட்டு வளரத் தொடங்கியதிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னரும் நீண்ட காலத்திற்குப் பயன்படுகிறது. இதனால் இதனை பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள்.

பனையிலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு அல்லாதப் பொருட்களும் கிடைக்கின்றன. இதிலிருந்து பதநீர் கிடைக்கிறது. இது சுவை மிகுந்த சத்தான பானமாகும். பதநீரை காய்ச்சி, கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகிறது.

பனை மரத்திலிருந்து கள் என்னும் பானமும் இறக்குகின்றனர். ஒரு மரத்திலிருந்து 30 ஆண்டுகள் வரையிலும் கள் இறக்கலாம். ஒரு மரத்திலிருந்து ஒரு பருவத்திற்கு 250 - 300 லிட்டர் கள் சேகரிக்கலாம். இதை அருந்தினால் போதை உண்டாகும்.

பனை ஓலை கூரை வேயவும், கூடை, பாய், விசிறி, அலங்கார பொருட்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. மரம் வீடுகளின் கட்டிடப் பணிக்கான விட்டங்களும், சட்டங்களும் செய்யப் பயன்படுகிறது. பழங்காலத்தில் பனை ஓலைகளே எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

பனையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. பனங்காய்களைக் கூழாக்கி அதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். மேலும் வாகனங்களுக்கு எரிநெய்யாகவும் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் டீசலுடன் 5 சதவீதம் பனை எண்ணெய் கலக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டுமுதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கதர் மற்றும் கிராமியத் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை தருகிறது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவை கிடைக்கின்றன. பனை பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன்மூலம் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியக் செலாவணி கிடைக்கிறது.



10. மாநில நடனம்

தமிழ் மாநிலத்தின் நடனம் பரதநாட்டியம் (Bharata Natyam) ஆகும். இது தென்னந்தியாவிற்கு உரிய நடனம். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு உரிய நடனம். உலகம் முழுவதும் உள்ளவர்கள் பரதநாட்டியத்தை இந்திய நாட்டின் நடனம் என்கின்றனர். இந்தியாவில் ஆடற்கலைகள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியமே. இது மிகவும் தொன்மை வாய்ந்த நடனம். ஆனால் பழங்காலத்தில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. 1940ஆம் ஆண்டிற்குப் பிறகே பரதநாட்டியம் என்ற பெயர் வந்தது.

பரதநாட்டியம் இந்தியாவிலும், இலங்கையிலும் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பிரபலமானது. இந்நடனத்தைப் பெரும்பாலும் பெண்களே ஆடுகின்றனர். இருப்பினும் ஆண்களும் ஆடுவதுண்டு. தேவதாசிப் பெண்கள் சதிராட்டம் என்ற ஆட்டத்தை தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடிவந்தனர். அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு, நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரதநாட்டியம் ஆகும். ஒரு திறமையான நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் பல்வேறு உணர்ச்சிகளைக் காணமுடியும்.

பரதம் :

பரதநாட்டியம் எவ்வாறு தோன்றியது, யாரால் தோன்றியது என்பதில் பல்வேறு கருத்துகள் உள்ளன. புராணக் கதையின் அடிப்படையில் பரத முனிவர் என்பவரால் உண்டாக்கப்பட்டது. அதனால் பரதம் என்ற பெயர் பெற்றது என்கின்றனர். அதே சமயத்தில் பரதம் என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கிறது. அதனால் இது பரதநாட்டியம் என்ற பெயரைப் பெற்றது என்கின்றனர்.

பரதம் என்ற சொல்லில் ப- பாவம், - ராகம், - தாளம், ம் - ஸ்ருதி என்பதைக் குறிக்கிறது. இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படுகிறது. பாரத நாட்டில் முதன்முதலாகத் தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. பாவம் என்ற வெளிப்படுத்தும் தன்மையின் அடிப்படையில் ‘ப’ என்ற சொல்லும், இசையை மையப்படுத்தும் ராகம் என்ற சொல்லிருந்து ‘ர’-வும், தாளம் என்ற சொல்லிருந்து ‘த’ என்ற எழுத்தும் வந்ததாகவே கூறுகின்றனர். இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கிறது. இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரதநாட்டியம். வரலாற்று நோக்கில் மிகச் சிறந்த ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம்.

வரலாறு :

பரதநாட்டியம் என்கிற இக்கலை வடிவமானது சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், நாடகம், சின்னnம், சதிர் எனப் பல பெயர்களில் இதனை அழைத்தனர். இது தவிர சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சிவபெருமான் அழிக்கும் கடவுளாக ஆடும் நடனத்தை ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனத்தை ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

பரதநாட்டியக் கலையைப் பற்றி தகவல்கள் பல இலக்கியங்களில் உள்ளன. பழங்கால தமிழ் மன்னர்களை மகிழ்விக்க ஆடிப்பாடி, அபிநயங்கள் செய்து மன்னர்களிடமிருந்து பொன்னும், பொருளையும் பெற்றனர். இதனைத் தொழிலாகக் கொண்டு கூத்துக் கலையை நடத்தி வந்தனர். கூத்துக் கலையை மேற்கொண்ட ஆண்களை கூத்தர் என்றும், பெண்களை கூத்தியர் என்றும் அழைத்தனர். இவர்களைப் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஆடல், நாட்டியம், நாடகம் என அழைக்கப்பட்ட பரதநாட்டிய வடிவம் சார்ந்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. மன்னரின் சபையில் அழகு, பாடல், ஆடல் ஆகிய மூன்றும் சிறந்த மகளிர் ஆடினர் எனக் குறிப்பிட்டுள்ளார். மாதவி என்னும் ஆடல் நாயகியைப் பற்றி சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழமன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி தனது நாட்டியத்தை அரங்கேற்றினார். மாதவி நாட்டிய விதிகளை நன்கு கற்றவர்.

பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசைகளுக்கும் ஏற்ப சிறப்பாக ஆடும் திறமை படைத்தவராக மாதவி இருந்தார். அவர் ஆடலிலும், அழகிலும் சிறந்த பெண்ணாக விளங்கினார். மாதவி 11 வகை ஆடல்களை ஆடத் தெரிந்தவராக இருந்தார் எனச் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், துடிக்கூத்து, பேடிக்கூத்து, கடையக் கூத்து, மரக்கால்கூத்து, பாவைக்கூத்து, கூத்து என 11 வகையான ஆடல்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.

தமிழ் நாட்டின் கோயில்களிலும் ஆடல்பாடல் இடம் பெற்றிருந்தது. முதலாம் இராஜராஜசோழன் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் என்கிற பெரிய கோயிலை தஞ்சையில் கட்டினார். இக்கோயிலில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். இக்கோயிலில் சுமார் 400 ஆடல் மங்கையரை ஆடுவதற்காக நியமித்திருந்தார். இவர்களுக்கு தனி வீடுகள் பொருள், பணம் ஆகியவற்றை வழங்கி ஆடல் கலையை வளர்த்தார்.

ஆடல்கலையை பயிற்றுவிக்க நாட்டிய ஆசான்களும் இருந்தனர். பாடவும், பக்க இசை வாசிக்கவும் கலைஞர்கள் இருந்தனர். அதனால் கோயில்களில் கலைத்தொண்டு சிறப்பாக வளர்ந்தது. கோயில்களில் கலைப்பணி தொடர்வதற்கு மன்னர்கள் உதவினர். இதுபோல பல கோயில்களிலும் ஆடல் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதனால் நாட்டியத் தொழில் செய்வோர்களின் பரம்பரை தொடர்ந்தது. காலப்போக்கில் இக்கலையானது தாசி ஆட்டம், சின்னnம், சதிர் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு பரதநாட்டியம் என்கிறப் பெயரைப் பெற்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சதிர் என்றும், சதிர் கச்சேரி என்றும் அழைக்கப்பட்ட நடனமே மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியம் என்கிற பெயரில் விளங்கி வருகிறது.

மேடை நாட்டியம் :

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டியம் என்பது கோயில்களிலும், அரண்மனைகளிலும் மட்டுமே நடந்து வந்தன. 19ஆம் நூற்றாண்டில் நாட்டியத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. தஞ்சையில் பிறந்த நான்கு சகோதரர்களான சின்னையா, பொன்னையா, சிவானந்தம் மற்றும் வடிவேலு ஆகியோர் நாட்டியக் கலையிலும், இசைக் கலையிலும் வல்லவர்களாக இருந்தனர். இவர்களே நாட்டியக் கலையை மேடைக்குரிய நிகழ்ச்சிகளாக மாற்றினார். அதனால் மேடை நாட்டிய முறை இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிப் பாடல்களும் மேடை நாட்டிய நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

பரதநாட்டியம் :

பரதநாட்டியத்தை முறையாக கற்றுக்கொண்டபிறகே அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பரதநாட்டியமானது நிருத்தம், நிருத்தியம் மற்றும் நாட்டியம் என மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. இத்துடன் கருத்தையும், உணர்வையும் வெளிப்படுத்த நான்கு விதமான அபிநயங்கள் உள்ளன. பரதநாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (Items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித்தன்மை உண்டு.

பரதநாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம் மற்றும் இசைக் கருவிகளான வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியவை தேவை. இசைக் கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைப்பார்கள். நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நாட்டியத்தின் தன்மைக்கு ஏற்ப வண்ணப்பட்டாடைகள் அணிவார்கள். காலில் சலங்கையும் அணிந்து ஆடுவார்கள். உடை கண்ணியமானதாக இருக்கும்.

பரதநாட்டியக் கலைஞர் நாட்டியத்தின்மூலம் குதிப்பது, நிற்பது, நடப்பது, மடக்குவது, பாய்வது, வளைவது, சுற்றி வருவது எனக் கால்களுக்கு சிறப்பு இடத்தைக் கொடுக்கின்றனர். விதவிதமாக விரல்ககளை விரிப்பது, குவிப்பது, இணைப்பது, பிரிப்பது, நெளிப்பது ஆகியவற்றின் நின்று கொண்டே கரங்கள் மூலம் உணர்த்துவார்கள். அத்துடன் புருவங்களின் ஏற்ற, இறக்கம், இமைகளின் சிறகடிப்பு, சுழலும் கருவிழி, விழி வீச்சின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல், புன்னகை மூலம் மலர்ச்சியை தெரிவிப்பது, வேதனையில் கண்கள் துடிப்பது, உதடுகளைச் சுழிப்பதன் மூலம் உள்ளத்தில் உள்ள வெட்கம், வேதனை, கோபம், கிண்டல் போன்ற உணர்வுகளை வெளிக்காட்டுதல் என்று அனைத்தையும் ஆழ்மனதில் இருந்து கொண்டுவருவது பரதநாட்டியத்தின் தனிச்சிறப்பு.

இந்தக் கலையில் பாணி வேறுபாடு அதிகம் உண்டு. அத்துடன் மரபின் கட்டுப்பாடுகளை தகர்க்கக்கூடிய முழு சுதந்திரமும் இந்த கலைக்கு உண்டு. பரதநாட்டியம் பழமைகளை பேணிக்காப்பதுடன், பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளது. பழமையைப் போற்றும் வகையில் பாஞ்சாலி சபதம், பகீரதன் தவம், பக்தை சபரியின் இலந்தைக்கனி போன்றவற்றை நாட்டியமாக அபிநயித்து சிறப்பு செய்கிறார்கள். அத்துடன் நாட்டின் சிறப்புகள், அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், தேசப்பற்று, ஒற்றுமை, நலத்திட்டங்கள் போன்றவற்றையும் இந்த நடனம் மூலம் உணர்த்தலாம். அதன்படி பழமையான ஒரு கலை பாரம்பரியம், பண்பாடு மாறாமல் பல புதுமைகளுக்கும் இடம் கொடுக்கிறது என்பது தான் பரதநாட்டியத்தின் தனிச் சிறப்பு.

Reference :

1. இணைய தளம்

2. மாலைமலர் - செப். 19, 2013

3. தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் - இணைய தளம்

4. அறிவியல் களஞ்சியம் - தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

5. தமிழ் விக்கிப்பீடியா

6. தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்

7. தினத்தந்தி

1